தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் சிறப்பு வர்த்தக நீதிமன்றங்கள்!

தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் சிறப்பு வர்த்தக நீதிமன்றங்கள்!

1991-ம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து, வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் இந்தியாவை நோக்கி வரத்தொடங்கின. முதலீடு, தொழில் என்றால் பிரச்னைகளும், வழக்குகளும் வரத்தானே செய்யும்?

ஆனால், வழக்குகளை முடிப்பதில் ‘நீண்ட காலதாமதம்’ என்கிற பிரச்னையினால் நீதிமன்றங்கள் செயலிழந்து உள்ளது. இதன் விளைவாக, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன.



கடந்த 31.3.2014-ன் படி, 34,32,493 சிவில் வழக்குகள் 24 உயர் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 4,90,383 சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் பத்து வருடங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளும் அடக்கம். இந்திய அளவில், அலகாபாத்துக்கு அடுத்து நமக்கு இரண்டாவது இடம்.

முதலீடுகளை ஈர்க்க, அதிக மதிப்பு வாய்ந்த வியாபாரப் பிரச்னைகள் விரைவாக தீர்க்கப்படும் என்ற உத்திரவாதத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

2003-ல் மத்திய சட்ட ஆணையம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. பக்கத்து குட்டி நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானில்கூட வர்த்தக நீதிமன்றங்கள் உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ், அரபு எமிரேட்ஸ், போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் செயல்படும் சிறப்பு வர்த்தக நீதிமன்றங்களின் செயல்பாட்டை ஆராய்ந்தது.

முடிவாக, புதிய தொழில் நுட்பங்களை கையாண்டு அதிவிரைவாக வழக்குகளை முடிக்க, சிறப்பு வர்த்தக நீதிமன்றங்கள் தொடங்கும் பரிந்துரையை, 2009-ம் ஆண்டு சட்ட ஆணையம் அரசிடம் சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, The Commercial Division of High Courts Bill - 2009 என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒரு கோடி ரூபாய் அல்லது ஐந்து கோடி மதிப்புக்கும் அதிகமான வியாபார பிரச்னைகளைத் தீர்க்க, இரண்டு நீதிபதிகள் அடங்கிய வர்த்தக நீதிமன்ற அமர்வு உயர்நீதிமன்றங்களில் மட்டும் உருவாக்கப்படும்.

தேவைக்கேற்ப அமர்வுகளின் எண்ணிக்கையை நீதிமன்றம் தீர்மானித்துக் கொள்ளலாம். வழக்குகள் தாக்கல் செய்ததிலிருந்து தீர்ப்பு சொல்லப்படும் வரையிலான ஒவ்வொரு படிக்கும் கால வரையறை செய்யப்பட்டது. இந்த வழக்குகளுக்கு அப்பீல் என்றால் உச்ச நீதிமன்றம்தான் என்றும் நிர்ணயம் செய்யப் பட்டது.

ஆனால், ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக, நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்கவே உயர்நீதிமன்றங்கள் திணறுகின்றன. சிவில் வழக்குகளை முடிக்க மாவட்ட நீதிமன்றங்களைவிட உயர் நீதிமன்றங்கள்தான் அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. மற்ற சிவில் மற்றும் குற்ற வழக்குகளும் முக்கியம் வாய்ந்ததுதானே? வியாபார வழக்குகளுக்கு மட்டும் ஏன் இந்த முன்னுரிமை என்றெல்லாம் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனவே, மசோதாவை மேலும் பட்டை தீட்ட, மீண்டும் சட்ட ஆணையத்துக்கு  அனுப்பப் பட்டது.

குறைகளை களைந்து, புதிய சட்ட மசோதாவை சட்ட ஆணையம் ஜனவரி 2015-ல் அரசிடம் சமர்பித்தது. அதன் அடிப்படையில் THE Commercial Division and Commercial Appellate  Division of High Courts and Commercial Courts Bill - 2015 என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த மசோதாவின்படி,  வர்த்தக ரீதியிலான சர்ச்சை களுக்கு தீர்வு காண நாடு முழுதும் வர்த்தக நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. உயர் நீதிமன்றங்களையும் மாநில அரசையும் மத்திய அரசு ஆலோசிக்கும்.

ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான வர்த்தகம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு காணப்படும். சாதாரண வியாபாரத் தகராறுகள் முதல், பார்ட்னர்ஷிப், நிதி, இன்ஷூரன்ஸ், ஏஜென்சி போன்றவற்றில் ஏற்படும் தகராறுகளும், கூட்டுத் தொழில், அறிவுசார் சொத்துரிமை (IPR) தகராறுகளும் ‘வர்த்தகத் தகராறு’ (Commercial disputes) என வரையறுக்கப்பட்டுள்ளன.



வழக்குகள் தாக்கல் செய்ததிலிருந்து தீர்ப்பு சொல்லப்படும் வரையிலான ஒவ்வொருபடிக்கும் கால வரையறை உள்ளது. அதன்படி, ஆறு மாதங்களுக்குள் வழக்கு முடிவுக்கு வரும். இந்த நீதிமன்றங்களுக்காக தற்போது பின்பற்றப்படும் சிவில் நடை முறைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும். வாய்தாக்கள் கிடையாது. அபராதம் உண்டு.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி, இமாசலப் பிரதேச உயர் நீதிமன்றங்களில் வர்த்தக வழக்குகளை விசாரிப்பதற்கான தனி அமர்வுகள் ஏற்படுத்தப்படும். பிற மாநில உயர் நீதிமன்றங்களில் வர்த்தக வழக்குகளை விசாரிப்பதற்கான தனி அமர்வுகள், மாவட்ட நீதிபதி தலைமையிலான சிறப்பு வர்த்தக நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வர்த்தக வழக்குகள், மனுக்கள் ஆகியவை மேற்சொன்ன வர்த்தக அமர்வு விசாரணைக்கு மாற்றம் செய்யப்படும்.

அப்பீல் வழக்குகளை விசாரிப்பதற்கு எல்லா உயர் நீதிமன்றங்களிலும் தனி அப்பீல் அமர்வுகள் (Commercial Appellate Division) ஏற்படுத்தப்படும்.

ஆறு மாதங்களில் அப்பீல் வழக்கில் தீர்வு காணப்படும். இந்த மேல்முறையீட்டு அமர்வுதான் கீழ்க்கண்ட தீர்ப்பாயங்கள் வழங்கும் தீர்ப்புக்கு எதிரான அப்பீல் வழக்கை விசாரிக்கும்.

(a) Competition Appellate Tribunal

(b) Debt Recovery Appellate Tribunal

(c) Intellectual Property Appellate Board

(d) Company Law Board or National Company Law Tribunal

(e) Securities Appellate Tribunal

(f) Telecom Disputes Settlement and Appellate Tribunal

‘‘வர்த்தக நீதிமன்றங்கள் நாட்டிலேயே முன்மாதிரி நீதிமன்றங்களாக செயல்படும். இந்திய நீதித் துறையின் இமேஜை சர்வதேச அளவில் உயர்த்தும். அதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று சொல்கிறது சட்ட ஆணையம்.


வர்த்தக நீதிமன்றங்கள் கூடிய சீக்கிரம் வரவேண்டும் என்பதே தொழில் வளர்ச்சியை விரும்பும் அனைவரின் எதிர்பார்ப்பு!