ட்ரீம் இட், டூ இட், லிவ் இட் - கனவு நிஜமாக ஒன்பது வழிகள்!

  ட்ரீம் இட், டூ இட், லிவ் இட்  -  கனவு நிஜமாக ஒன்பது வழிகள்!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ரிச்சர்டு நியூட்டன் மற்றும் சிப்ரியன் அண்ட்ரியன் ரூசன் என்ற இருவர் இணைந்து எழுதிய ‘ட்ரீம் இட், டூ இட், லிவ் இட்’ என்ற உங்கள் கனவை நனவாக்க ஒன்பது வழிகள் என்னும் புத்தகத்தை. நம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... என்ற வால்ட் டிஸ்னியின் வாசகத்துடன் ஆரம்பிக்கின்றது, இந்தப் புத்தகம்.

ஸ்டீவ் ஜாப்ஸ், மகாத்மா காந்தி, வால்ட் டிஸ்னி போன்றவர்களிடத்தில் இருக்கும் ஒற்றுமை என்ன என்று கேட்கும் ஆசிரியர்கள், அவர்கள் கண்ட கனவை நனவாக்க அயராது உழைத்தனர். அது மட்டுமா? அவர்கள் கனவு நனவான பின்னருமே அவர்கள் முயற்சியை நிறுத்தவில்லை. அவர் களுடைய கனவை மேலும் மேலும் செம்மைப்படுத்தி  பலனை அதிகப்படுத்தினர். அது மட்டுமல்ல, புதிய கனவுகள் பலவற்றையும் கண்டு அவற்றை நனவாக்கவும் முயன்றனர். நீங்கள்கூட இந்த மூவரையும்போல் திகழ வாய்ப்பு இருக்கின்றது. சந்தேகமே வேண்டாம், நிஜத்தில் இது சாத்தியமே என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு என்ன வென்றால்,  புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ஆசிரியர்கள் தரும் ஆலோசனைகளைக் கொண்டது. இரண்டாவது பகுதி ஆசிரியர்கள் சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றி நிஜமாகவே தங்கள் கனவை நனவாக்கியவர்களின் செயல் மற்றும் நடைமுறைகள் குறித்த விளக்கங்கள். இந்த இரண்டு பகுதிகளும் கனவை நனவாக்க என்ன செய்யவேண்டும் என்பதைச் சுலபமான விதத்தில் தெளிவுபடுத்து கின்றன.



முதலில், கனவு ஒன்று வேண்டும். கனவுதான் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்லும். பின்னர் அங்கே செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். எப்படி சிந்திப்பது? முதலில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து சிந்தியுங்கள் என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள். பெரும்பான்மையான கனவை நனவாக்கியவர்கள் சிந்தித்ததினால் மட்டுமே அதைச் செய்தார்கள். ரொம்பவும் பெரிதாய் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், மிகச் சரியாய்ச் சிந்திக்கவேண்டும்.

சிந்திப்பதன் மூலம் கனவை அடைய என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிட வேண்டும். அடுத்தது அந்தப் பட்டியலில், இருப்பவற்றை எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அடுத்தபடியாக, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். கடைசியாக, அவற்றைச் செய்ய நம்மிடம் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களையும் சிந்தித்தால் நம் கனவைச் சென்றடையத் தேவையான ரூட் மேப் தெளிவாகக் கிடைக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த மேப்பை தயார் செய்வதில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன வென்றால், நம்முடைய கனவை அடையும் செயல்திட்டத்தில் குழப்பமில்லாத சின்னச் சின்ன ஸ்டெப்கள் நமக்குக் கிடைக்கும்.

மேப்பைப் பற்றி நாம் சிந்தித்துத் தெரிந்துகொண்டபின், அடுத்தபடியாக இந்த மேப்பை நிஜமாகவே நாம் வரைய வேண்டும். இந்த மேப்பை வரைவதன் மூலம் இன்னமும் நாம் கனவுக்கான திட்டத்தினுள் தீவிரமாக நுழைய ஆரம்பிக்கின்றோம். வரைதல் என்றால், ஏதோ ரூட் மேப் என நினைத்துவிடா தீர்கள். கனவை அடையும் பாதை குறித்த படிநிலைகளை வரைவதைத்தான் ரூட் மேப் என்கின்றோம். இந்த மேப்பை வரைவது எப்படி என்பதைப் பல்வேறு படங்களுடனும் உதாரணங்களுடனும் தெளிவாக விளக்கியுள்ளனர் ஆசிரியர்கள்.

சிந்தித்தாகிவிட்டது. மேப்பும் போட்டாகிவிட்டது. அடுத்து..?  ஆசிரியர்கள் சொல்வது ஸ்டார்ட் என்பதைத் தான். திட்டம் தயாராகிவிட்டது, ஆரம்பிப்பது அப்படி என்ன  கடினமா என்பீர்கள். கடினமே என்பதுதான் ஆசிரியர்களின் பதில். ஏனென்றால், நம்மில் பெரும்பாலானோர் சிந்திக்காமலேயே ஒரு செயலை ஆரம்பித்து விடுகின்றோம் அல்லது ஒரேயடியாய் சிந்தித்து நேரத்தைச் செலவழித்துவிட்டு, செயலை ஆரம்பிக்காமலே இருந்துவிடுகின்றோம். இதனாலேயே பெரும்பாலானோருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள். ஆரம்பிப்பது மிகவும் சுலபமான விஷயமாக இருந்தாலுமே நிஜத்தில் மிகமிகக் கடினமான விஷயம் இதுதான் என்கின்றார்கள் ஆசிரியர்கள்.

அடுத்து ஆசிரியர்கள் குறிப்பிடுவது, நாம் ஆரம்பித்த விஷயம் வொர்க்-அவுட் ஆகின்றதா என்று பார்க்க வேண்டும். இந்தச் செயலை செய்ததால் நாம் நம் கனவை நோக்கி முன்னேறு கின்றோமா, இல்லையா? வேகமாக நம்மை நம் கனவு நோக்கி இட்டுச்செல்லும் செயல் களைக் கண்டறிந்து அவற்றை அதிகமாகச் செய்தல். போகும் பாதை சரிதானா என்று சரிபார்த்துக்கொள்ளுதல் என மீண்டும் மீண்டும் நம்முடைய பாதையும் பயணத்தின் வேகமும் சரிதானா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்கின்றார்கள் ஆசிரியர்கள்.

அடுத்தபடியாக ஆசிரியர்கள் சொல்வது, மனம்தளராத குணத்தை. பிரச்னையைச் சந்திக்காத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும், கனவை நனவாக்க முனையும்போது நாம் எக்கச்சக்கப் பிரச்னைகளைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இவற்றில் பல பிரச்னைகள் இயற்கையானதாகவும், பல பிரச்னைகள் செயற்கையானதாகவும் இருக்கும். இதில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நாம் சந்திக்கின்ற பல பிரச்னை களில் ஒருசில பிரச்னைகளே தீர்க்கமுடியாத வையாக இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர்கள், பிரச்னைகள் என்பது அனைவரும் வாழ்வில் எதிர்கொள்வதே என்பதை முதலில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர்.

பிரச்னையைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர்கள், நம்முடைய கனவை அடையும் பாதையில் எவையெல்லாம் தவறாகப் போகும் வாய்ப்பு இருக்கின்றது என்பதைப் பற்றிச் சிந்தித்தும், அதை எப்படித் தவிர்ப்பது என்பதை அறிந்தும் வாழப்பழக வேண்டும் என்கின்றனர். இந்த இரண்டு விஷயங்களையும் முழுமையாக உணர்ந்து கொண்டால் வெற்றிக்கான வாய்ப்பை நாம் எவ்வாறு அதிகரிக்கச்செய்வது என்பதனை சுலபத்தில் புரிந்துகொள்ளலாம்.

பிரச்னையைக் கண்டு கலங்காமல் இருந்து விடாமுயற்சி செய்தால் மட்டுமே கனவு நனவாகும் என்றும் சொல்கின்றனர் ஆசிரியர்கள்.
அடுத்தபடியாக ஆசிரியர்கள் சொல்வது, கனவை மனதில் வைத்து நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, எப்போதுமே நம்முடைய பார்வையும் எண்ணமும் தொலைநோக்குடன் இருக்க வேண்டும். இந்தத் தொலைநோக்குப் பார்வையே நம்மை இடையில் வரும் இடையூறு களைச் சுலபத்தில் களையச்செய்வதாய் இருக்கும். தொலைநோக்குப் பார்வை இல்லாதபட்சத்தில் குறுகிய பார்வை இடையூறுகளைப் பெரிதாக்கிக் காண்பித்து, நம்மை அந்த இடத்திலேயே ஸ்தம்பிக்கச் செய்துவிடும் என்கின்றனர். இறுதியில் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து தடைகளை யெல்லாம் தாண்டி மன உறுதியுடன் செயல்பட் டால், நாம் நமது கனவை நனவாக்கிவிடுவோம்.

இதில் இருக்கும் சிக்கல் என்னவெனில்,  எப்போது நம்முடைய கனவு நனவாகின்றது என்பதை நாம் உணரமாட்டோம். இலக்கை அடைந்தபிறகும்கூட அதற்கான முயற்சியைத் தொடருவோம். இதைத் தவிர்க்க, நாம் இலக்கை அடைந்துவிட்டோம் என்ற உணர்வைப் பெற வேண்டும். அப்படி உணர்ந்து கொண்டால் அடுத்தக் கனவைக் காண ஆரம்பித்து, அதைச் செயலாக்கும் வழிகள் குறித்துச் சிந்திக்க ஆரம்பிப்போம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

அவ்வப்போது கொஞ்சம் திரும்பியும் பார்க்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர்கள், திரும்பிப்பார்த்தால் மட்டுமே நமக்கு நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகின்றோம், இடையில் கற்ற பாடங்கள் என்னென்ன என்பது புரியும்.  இது புரிந்தால், அட நாம் இவ்வளவு சிறப்பாக இந்த விஷயங்களைச் செய்துவருகின் றோமே என்ற மனமகிழ்ச்சி வரும். அந்த மன மகிழ்ச்சியே நம்மை அடுத்தடுத்து, நாம் காணும் புதிய கனவுகளை நனவாக்குவதில் மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

கனவு காணும் அனைவருமே படித்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களைச் சொல்லும் புத்தகம் இது.