ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்!


ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் இன்று (பிப்.24). கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.



பட்டமளிப்பு விழாவில் ஸ்டீவ் ஜாப்ஸ் "நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்" என்றார். அந்த மூன்று கதைகள் உங்களுக்காக...

முதல் கதை

நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, "மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், "டைப்போகிராபி" (அச்சுக் கலை) கொண்டது.

2வது கதை

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என் நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி' உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.

மூன்றாவது கதை

சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். "உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள்.

"பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்". இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்.