இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?

இரா.ரூபாவதி
‘‘எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா?’’ . அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

“வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம்.



பொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.

நாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.



இது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.

இதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் - மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும்,    கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்’’ என்றார்.

இதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும்  சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.