ஒரே நாளில் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு அதிபதி... யார் இந்த தமானி?

ஒரே நாளில் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு அதிபதி... யார் இந்த தமானி?






பங்குச் சந்தையில் எந்தப் பங்கை எப்போது வாங்குவது, எப்போது வெளியேறுவது, அந்த செயல்பாட்டில் நினைத்துப் பார்க்கவே முடியாத வருமானத்தை எப்படி அடைவது என்பது மிகப்பெரிய ரகசியம். இந்த ரகசியத்தை அறிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் ராதாகிருஷ்ணன் தமானி.

ஆரம்பத்தில் இவர்  வாங்கும் பங்குகளைக் குறித்து நண்பர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஏன் இந்தப் பங்கை வாங்கினாய், இதைவிட நல்ல பங்குகள் எல்லாம் இருக்கிறதே என்பார்கள். ஆனால் எப்போதும் தன்னுடைய முதலீடுகளுக்கு தனி கொள்கையைக் கொண்டிருந்தார் தமானி. ஆரம்பத்தில் வர்த்தகராக இருந்தவர் முதலீட்டாளராக மாறினார்.

இவருடைய காலத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் மறக்க முடியாத மற்றொரு பெயர் ஹர்ஷத் மேத்தா. சந்தை நோக்கர்கள், ஹர்ஷத் மேத்தாவை காளை என்றும், தமானியை கரடி என்றுகூட வருணிப்பார்கள். சந்தை காளையின்போக்கில் இருக்கும்போது ஹர்ஷத் மேத்தாவின் செயல்பாடு அதிகமாகவும், சந்தை கரடியின் போக்கில் இருக்கும்போது தமானியின் செயல்பாடும் அதிகமாக இருக்கும். ஹர்ஷத் மேத்தா பங்குகளை விலை உயர்வதில் கவனம் செலுத்துவார். ஆனால் தமானி அவருக்கு நேர்மாறாக பங்குகள் விலை இறங்குவதில் கவனம் செலுத்துவார். பங்குகள் மிகக் குறைவான விலைக்கு இறங்கும்போது முதலீடு செய்து நீண்ட காலத்துக்கு வைத்திருப்பார். நாளடைவில் இவரது போர்ட்ஃபோலியோவில் இருந்த பங்குகள் எல்லாம் பல மடங்கு உயர்ந்து பெரும் வருமானத்தைத் தரும்.

உதாரணத்துக்கு, 1995-ல் ரூ. 8 விலையில் ஹெச்டிஎஃப்சி பங்குகளை வாங்கினார். அப்போது அந்தப் பங்கில் அதிகம் முதலீடு செய்த தனிநபர் இவர்தான். இன்று ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை ரூ. 1400 ல் இருக்கிறது. நாளடைவில் ஃபண்ட் மேனேஜர்களும், போர்ட்ஃபோலியோ க்ரியேட்டர்களும் இவரது பங்குகளை கவனிக்க தொடங்கினர்.

சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்துகொண்டிருந்த தமானி, 2000க்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை நிறுத்திக்கொண்டு, சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க நினைத்தார். 2000க்குப் பிறகு சூப்பர் மார்க்கெட் கலாசாரம் இந்திய நகரங்களில் பிரபலமடைய ஆரம்பித்தது. இவர் அந்த பிசினஸைத் தேர்ந்தெடுத்தார். 2003ல் மும்பை பவாய் பகுதியில் சூப்பார் மார்க்கெட் ஒன்றை தொடங்கினார். அப்போது தன்னிடம் இருந்த பணத்தை வைத்து சில இடங்களை  வாங்கிப் போட்டார். அந்த இடங்களை சூப்பர் மார்க்கெட் பிசினஸுக்காகப் பயன்படுத்தினார். அவென்யு சூப்பர்மார்ட் என்ற நிறுவனத்தை நிறுவினார். முதல் 10 ஆண்டுகளில் பெரிய அளவில் பிசினஸில் முன்னேற்றம் இல்லை. 2010 வரை மொத்தமாக 25 கடைகள் மட்டுமே இருந்தன. அதன்பிறகு வளர்ச்சியை மிகத் தீவிரமாக முன்னெடுத்தார். தற்போது மொத்தமாக 110 கடைகள் உள்ளன.

இந்தத் துறையில் ரிலையன்ஸ், பிக்பஜார், மோர் (More) போன்ற பல நிறுவனங்கள் இருந்தாலும் போட்டிகளை எதிர்கொண்டு நிலைத்து நின்றது. டி-மார்ட் முதலீட்டாளர்கள் மனதில் பதிந்துபோனது. சமீபத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வரவேற்பு குவிந்தது. 145 மடங்கு அதிகமாக இதன் பங்குகள் விண்ணப்பிக்கப்பட்டன. ஐபிஓவைத் தொடர்ந்து சந்தையில் பட்டியலானதும் அதன் பங்கு நன்றாக ஏற்றம் அடைந்தது. முதல் நாளே 114 சதவிகிதம் உயர்ந்தது.

இதன் மூலம் அவருடைய சொத்து மதிப்பு உயர்ந்து இன்று ரூ. 35000 கோடியாக இருக்கிறது. சந்தையில் பட்டியலிடுவதற்கு முந்தைய நாள் வரை போர்ஃப்ஸின் இந்தியப் பணக்காரர் பட்டியலில் 896 இடத்தில் இருந்தவர் பட்டியலான முதல் நாளே, அனில் அம்பானி, ராகுல் பஜாஜ், அஜய் பிரமல் ஆகியோரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி 17வது இடத்துக்கு உயர்ந்தார்.

சந்தையில் பட்டியலானதால் இவர் மட்டும் கோடீஸ்வரர் ஆகவில்லை, இவருடைய அவென்யு சூப்பர்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முதல் அதன் ஊழியர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் என அனைவரும் கோடீஸ்வரர்களாகவும் லட்சாதியபதியாகவும் மாறியுள்ளனர். ஏனெனில் தனது நிறுவனத்தின் பங்குகளில் கணிசமான சதவிகிதத்தை இவர்களுக்கு பரிசளித்துள்ளார். பங்கு உயர்ந்த வேகத்தில் ஒரே நாளில் அனைவரும் பணக்காரர் ஆகியுள்ளனர்.
தானும் உயர்ந்து தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தியிருக்கும் தமானியின் மகத்தான பண்புகளில் ஒன்று பிறரின் கருத்துகளைக் கேட்டறிதல். இந்தக் கேள்வியறிவு தான் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது வட்டாரத்தினர்.